நாகை மாவட்டம், சீர்காழி அருகே ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.11.50 லட்சத்தை பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சீர்காழி சட்டப் பேரவைத் தொகுதியில், சமூக பாதுகாப்புத் திட்டத் தனி வட்டாட்சியர் என்.பி. இந்துமதி, மண்டல துணை வட்டாட்சியர் பாபு மற்றும் போலீஸார் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர், சீர்காழியை அடுத்த சூரக்காடு பகுதியில் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது, கீழச்சாலை பகுதியிலிருந்து சீர்காழி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், ஆவணங்களின்றி ரூ.11.50 லட்சம் இருந்தது தெரியவந்தது. அதைக் கைப்பற்றிய பறக்கும் படையினர், உரிய ஆவணங்களை விசாரணை அதிகாரியிடம் வழங்கி, பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு காரில் வந்தவர்களிடம் அறிவுறுத்தினர். மேலும், கைப்பற்றப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.