நாகையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்க மகளிர் துணைக் குழு மாவட்ட அமைப்பாளர் பா. ராணி தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் ஆர். ரஷ்யா, செ. எழிலரசி ஆகியோர் என் குடும்பம்; நம் எதிர்காலம் என்ற தலைப்பில் பேசினர்.
ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாற்றம்; முன்னேற்றம்; பெண்கள் என்ற தலைப்பில் பேசினார்.
ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் வளர்மாலா, பள்ளி மாணவி து.இ. அனுஸ்ரீ ஆகியோர் பெண்கள் எழுச்சிப் பாடல்களைப் பாடினர். மகளிர் துணைக் குழு உறுப்பினர்கள் ஜம்ரீத் நிஷா, சசிகலா ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
பொள்ளாச்சியில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் குற்றங்கள் குறித்து நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். பெண்கள் பணியாற்றும் அலுவலகங்களில் நடைபெறும் பாலியல் சீண்டல்களை விசாரிக்க உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, மாவட்ட அளவிலாவது விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட இணைச் செயலாளர் ஆர். கலா வரவேற்றார். மாவட்டத் தணிக்கையாளர் சி. வாசுகி நன்றி கூறினார்.