ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரொக்கம் பறிமுதல்
By DIN | Published On : 24th March 2019 05:14 AM | Last Updated : 24th March 2019 05:14 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை அருகே ரூ. 1.17 லட்சம்...
யிலாடுதுறை அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.17 லட்சத்தை தேர்தல் சோதனைக் குழு அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மணக்குடியில் தனி வட்டாட்சியர் டி. சண்முகம் தலைமையில், தலைமைக் காவலர்கள் கி.ஹரிபாஸ்கர், கே.சுரேஷ், கே.சுந்தர் ஆகியோர் அடங்கிய நிலையான தேர்தல் சோதனைக் குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக மயிலாடுதுறை நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில், ரூ.1.17 லட்சம் ரொக்கம் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. அப்பணத்தைப் பறிமுதல் செய்த தனி வட்டாட்சியர் டி.சண்முகம், மயிலாடுதுறை வட்டாட்சியர் ஆர். மலர்விழியிடம் ஒப்படைத்தார். விசாரணையில், கொற்கை கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் மயிலாடுதுறையில் உள்ள நிதி நிறுவனத்துக்கு அந்த பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பணம் மயிலாடுதுறை சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சீர்காழி அருகே ரூ. 3.5 லட்சம்...
சீர்காழி அருகே கொள்ளிடம் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ. 3.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்களவைத் தேர்தலையொட்டி, சீர்காழி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் என்.பி. இந்துமதி மற்றும் காவல் துறையினரைக் கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர், கொள்ளிடம் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, சீர்காழி பகுதியிலிருந்து சென்னை நோக்கி சென்ற காரை நிறுத்தி, சோதனையிட்டதில், அந்த காரில் ரூ.3.5 லட்சம் பணம் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. அந்த பணத்தை வைத்திருந்த மயிலாடுதுறை கூரைநாடு பகுதியைச் சேர்ந்த ஆ. ராஜசேகர் (43) என்பவரிடம் நடத்திய விசாரணையில் உரிய ஆவணங்களின்றி இந்த பணத்தை கொண்டுவந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரூ. 3.5 லட்சத்தையும் பறிமுதல் செய்து, சீர்காழி கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பணத்தை பெற்றுக்கொள்ளும்படி ராஜசேகரை அறிவுறுத்தினர்.