நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை ம. சரவணன், நாகை கடைவீதி மற்றும் புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் திங்கள்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையும் நிலையில், நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள், வாக்குச் சேகரிப்புப் பணிகள் சூடுபிடிக்காமலேயே இருந்தது.
இந்த நிலையில், நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை எம். சரவணன், நாகையில் திங்கள்கிழமை மாலை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். நாகை ரயில் நிலையம், பழையப் பேருந்து நிலையம், பெரிய கடைவீதி, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். நாகை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவு நடந்தே சென்ற அவர், வணிகர்கள், தொழிலாளர்கள், மீன் வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
நாகை அதிமுக நகரச் செயலாளர் தங்க. கதிரவன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.