கீழ்வேளூர் அருகே மூங்கில்குடி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழ்வேளூரில் இருந்து மூங்கில்குடி வழியாக நாகூர் வரை செல்லும் சாலையில் கீழ்வேளூர்- மூங்கில்குடி வரை உள்ள சுமார் 7 கி. மீ. தூரத்துக்கு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. கடம்பங்குடி பகுதியில் இயங்கும் ஓஎன்ஜிசி நிறுவனம் இந்த சாலை சீரமைத்து தருவதாக உறுதியளித்த நிலையில், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சாலையில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் செல்லும் கனரக வாகனங்களால்தான் சாலை பழுதடைகிறது எனக் கூறப்படுகிறது. ஆனால், அந்த நிறுவனம் உறுதியளித்தப்படி சாலையை சீரமைக்கவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் பேசி உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.