நாகை மாவட்டம், திட்டச்சேரி மற்றும் சுற்றுப் பகுதிகளில் திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்ட ஒருவரை தனிப்படை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து 25 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, திட்டச்சேரி காவல் சரகம், மேலகுருவாடி, மானாம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து நகைகள் தொடர்ச்சியாக திருட்டுப் போயின.
இதுகுறித்து, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், சார்பு ஆய்வாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தத் தனிப்படை போலீஸார் திட்டச்சேரி மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகப்படும் வகையில் சென்று கொண்டிருந்த ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அவர், திருமருகல் அருகே உள்ள சேகல், வடக்குத் தெருவைச் சேர்ந்த வீராசாமி மகன் சட்டநாதன்(36) என்பதும், திட்டச்சேரி மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஆள் இல்லாத வீடுகளின் பூட்டை உடைத்து அவர், திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, சட்டநாதனை கைது செய்து செய்த தனிப்படை போலீஸார், அவரிடமிருந்து 25 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.