விவசாயிடமிருந்து ரூ. 75 ஆயிரம் வழிபறி
By DIN | Published On : 16th May 2019 07:22 AM | Last Updated : 16th May 2019 07:22 AM | அ+அ அ- |

சீர்காழியில் விவசாயி ஒருவரிடமிருந்து ரூ. 75 ஆயிரத்தை வழிபறி செய்த மர்ம நபர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சீர்காழி அருகேயுள்ள கீழமாத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரவேல் (50) புதன்கிழமை சீர்காழியில் உள்ள ஒரு வங்கியில் ரூ. 75 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பியுள்ளார். அப்போது, பழைய பேருந்து நிலையம் அருகே சந்திரவேலுவை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் வழிமறித்து முகவரி விசாரித்துள்ளனர். திடீரென வழி மறித்ததால் நிலை தடுமாறி கையிலிருந்த செல்லிடப்பேசியை தவறவிட்ட சந்திரவேல் கீழே குனிந்து அதை எடுத்துள்ளார். அப்போது, மர்ம நபர்கள் சந்திரவேலு தன்னுடை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 75 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடினர். இதுகுறித்த, புகாரின்பேரில் சீர்காழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.