நாகை மாவட்டம், மகிழி முத்துமாரியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூண்டி அருகே மகிழியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், பழைமையான கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு வருடாபிஷேகத்தையொட்டியும், உலக நன்மைக்காக பிரார்த்தித்தும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு யாகம் நடைபெற்றது. 108 வகையான மூலிகைப் பொருள்கள் மற்றும் காய், கனிகள் யாகத்தில் அர்ப்பணிக்கப்பட்டன. யாகத்தின் நிறைவில், மகா பூர்ணாஹுதி நடத்தப்பட்டது. பின்னர், கடம் புறப்பாடு நடைபெற்றது. ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் கோயில் பிராகாரம் சுற்றி கோயிலுக்கு கொண்டுச் செல்லப்பட்டன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், கடங்களிலிருந்த புனித நீரைக் கொண்டும் பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது.