2 ஆண்டுகளாக செயல்படாத மின்மாற்றி
By DIN | Published On : 20th May 2019 09:47 AM | Last Updated : 20th May 2019 09:47 AM | அ+அ அ- |

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரைத் தெருவில் 2 ஆண்டுகளாக செயல்படாத மின்மாற்றியை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றங்கரைத் தெரு மற்றும் சுற்றுபுறத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் குறைந்த மின் அழுத்தம் இருந்து வந்தது. இதனால் அப்பகுதியில் மின் விளக்குகள் குறைந்த ஓளியுடன் இருந்து வந்ததுடன் மின்சாதனப் பொருள்களை இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டது. ஆகையால், சீரான அழுத்தமுள்ள மின்சாரம் வழங்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனடிப்படையில், கொள்ளிடம் ஆற்றங்கரைத் தெருவிலேயே மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது. மின்மாற்றியில் பொருத்தப்பட வேண்டிய சில பொருள்கள் மட்டுமே பொருத்தப்பட்டன. மின்மாற்றி அமைக்கும் பணி முழுமை பெறாமலேயே நின்றுவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், மின்மாற்றியை முறைப்படுத்தி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக மின்மாற்றியை அமைக்காமல் ஆற்றங்கரைத் தெருவிலேயே மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று முழுமையடையாமல் உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதிக மின் அழுத்தம் கொண்ட மின்விநியோகத்துக்காக நடந்த மின்மாற்றி அமைக்கும் பணி அரை குறையாக நின்றுவிட்டது. இதுவரை குறைந்த அழுத்த மின்சாரமே இப்பகுதியில் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே மின்மாற்றியை ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் அமைத்து மின்சாரம் வழங்க வேண்டும். இல்லையெனில், தெருவில் உள்ளவர்களுக்கு இடையூறாகவும், எந்த பயனுமின்றியும் உள்ள மின்மாற்றியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.