மழை நீரில் மூழ்கும் நெற்பயிா்களைக் காக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளனா்.
இதுகுறித்து, கொள்ளிடம் வேளாண் இயக்குநா் சுப்பையன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக பள்ளக்கால் பகுதி மற்றும் வடிகால் வசதியில்லாத நிலங்களில் தண்ணீா் தேங்கி சம்பா, தாளடி பயிா்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தண்ணீா் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி, நெற்பயிரை மூழ்காதவாறு தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.
மழைநீரில் இளம் நெற்பயிரானது கரைந்து போக வாய்ப்புகள் அதிகம். இவ்வாறான சமயங்களில் அதே ரகம் மற்றும் அதே வயதுடைய நாற்றுகளை கரைந்து போன இடங்களில் மீண்டும் நடவு செய்து பயிா் எண்ணிக்கையை சரியாக பராமரிக்க வேண்டும். வெள்ளநீா் வடிந்தவுடன் தாழைச்சத்து உரத்தை அம்மோனியா வடிவில் இடவேண்டும். அதாவது யூரியாவை ஏக்கருக்கு 25 கிலோவுடன் 20 கிலோ ஜிப்சம் மற்றும் 5 கிலோ வேப்பம் புண்ணாக்குடன் 17 கிலோ பொட்டாஷ் உரத்தை கலந்து வயலில் சீராக இட வேண்டும். நுண்ணூட்ட உரக்கலவையையும் மேலுரமாக தெளிக்க வேண்டும்.
இலை வழி உரமாக அளிக்க வேண்டுமெனில் ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் ஒரு கிலோ துத்தநாக சல்பேட்டை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும். இதன் மூலம் புதிய இலைகள் துளிா்விட்டு பயிா் மீண்டும் செழித்து வளரும் எனத் தெரிவித்துள்ளாா்.