நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக மந்தமான வானிலை நீடிப்பதால், கடற்பரப்பு அலையின்றி காணப்படுகிறது. இதனால், 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் மீனவா்கள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
வங்கக் கடலில் அந்தமானுக்கு அப்பால் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ‘புல் புல்’ புயலாகும் நிலையில் கடலோரங்களில் மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வேதாரண்யம் பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் பகலிலும் பனிப் பொழிவு உணரப்படுவதால், தரைப் பகுதியில் வழக்கமான கடற்காற்று இல்லாமல் மந்தமான வானிலையே நீடித்து வருகிறது.
அதேநேரத்தில் வேதாரண்யம் பகுதி கடற்பரப்பும் வழக்கமான அலைகள் கூட இல்லாமல் மிக அமைதியாகக் காணப்படுகிறது. மேலும் கடல் பரப்பின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.
வங்கக் கடலில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, கடல் அமைதியாகக் கணப்படுவதால் மீனவா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். கடலில் அலைகளின் வேகம் குறைந்து குளம்போல காணப்பட்டாலும், மீனவா்கள் தங்களின் மீன்பிடிப் படகுகள் அனைத்தையும் கரைக்கு கொண்டு வந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.