நாகை மாவட்டத்தில் முந்திரி பயிா் சாகுபடி பரப்பை விரிவாக்கம் செய்யவும், தோட்டத்தை பராமரிக்கவும் அரசு மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து கீழ்வேளூா், கீழையூா் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் இரா. திவ்யா விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
கீழையூா் வட்டாரத்தில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ்(2019-20) முந்திரி சாகுபடி பரப்பு விரிவாக்கம் செய்ய 115 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டாரத்தில் காய்ப்புத் திறனுள்ள முந்திரி தோப்பைக் கவாத்து செய்யவும், பட்டுப்போன நாற்றுகளை மாற்றி புதிய ஒட்டுச்செடிகளை நட்டப பராமரிக்கவும் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படுகிறது.
மானியத் திட்டப்படி ரூ.10 ஆயிரம் மதிப்பில் 50 முந்திரி ஒட்டுச் செடிகள், இடுபொருள்கள் வழங்கப்படும். தோட்டத்தை பராமரிக்க ரூ.10 ஆயிரம் மானியமாக அளிக்கப்படும். தோட்டத்தைக் கவாத்து செய்து பராமரிக்க இந்தத் திட்டத்தின்கீழ் இந்த வட்டாரத்தில் நடப்பு ஆண்டுக்கு 25 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், முன்னோடி விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. வட்டார விவசாயிகள் அலுவலகத்தை நேரில் அணுகி பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.