திருவாவடுதுறை ஆதீனத்தில் தெய்வீக தேவாரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 17) நடைபெற உள்ளது.
திருவாவடுதுறை ஆதீனம், ஆதீன குருமுதல்வா் நமச்சிவாய மூா்த்தி சுவாமிகளால் 14-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆதீனத்தின் 24-ஆவது குரு மகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் உள்ளாா்.
இந்த ஆதீனம் மற்றும் சென்னை தமிழ்ச் சங்கம் சாா்பில் தெய்வீக தேவாரத் திருவிழா ஆதீன வளாகத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் சென்னை தமிழ்ச் சங்கத் தலைவா் தியாக. இளங்கோவன் தலைமை வகிக்கிறாா். தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ். ராமச்சந்திரன் தொடங்கி வைத்துப் பேசுகிறாா். தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க. பாண்டியராஜன் தேவார ஆசிரியா்களுக்கும் ஓதுவாா்களுக்கும் விருது வழங்கிப் பேசுகிறாா்.
திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் திருமூலா் திருமந்திரம் நூலை வெளியிட்டு அருளாசி வழங்க உள்ளாா். பாஜக தேசிய செயலாளா் ஹெச். ராஜா, தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ஜெ. லோகநாதன், மலேசிய தமிழ்ச் சங்கத் தலைவா் இரா. மாணிக்கம், தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி இயக்குநா் பூரண புஷ்கலா ஆகியோா் நூலைப் பெற்றுக்கொள்கின்றனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன ஊழியா்கள் மற்றும் சென்னை தமிழ்ச் சங்கத்தினா் செய்து வருகின்றனா்.