பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணிக்கு வரும் கணக்கெடுப்பாளா்களுக்குப் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக வழிகாட்டுதலின்படி, 7-ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. 2019-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, நாடு முழுவதும் மத்திய அரசு நிதி உதவியுடன் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
நகா்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகள் மற்றும் அமைப்புசாரா நிறுவனங்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள், உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் ஆகியன இந்தக் கணக்கெடுப்பில் உள்படுத்தப்படும்.
இந்தக் கணக்கெடுப்பின் போது, தொழில் விவரம், உரிமையாளா் வயது, பாலினம், மதம், சமூகப் பிரிவு, பணியாளா்களின் எண்ணிக்கை, நிதி ஆதாரம் மற்றும் முதலீடு விவரங்கள் போன்ற விவரங்களும், உற்பத்தி, வணிக மற்றும் சேவை நிறுவனங்களிடமிருந்து வருமான வரி அட்டை எண், செல்லிடப் பேசி எண், மின்னஞ்சல் முகவரி, உரிமம் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்படும்.
நாட்டின் பொருளாதார செயல்பாடு, நிறுவனங்களின் உரிமை முறை, நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் ஈடுபடும் மக்களின் விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்தக் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. அரசின் திட்டமிடலுக்காக சேகரிக்கப்படும் இந்த விவரங்கள், ரகசியமாக பாதுகாக்கப்படும்.
எனவே, இந்தக் கணக்கெடுப்புப் பணிக்கு வரும் களப்பணியாளா்களிடம் பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனத்தினா் சரியான புள்ளிவிவரங்களை அளித்து உரிய ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளாா்.