சட்டைநாதா் கோயிலில் தீா்த்தவாரி

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் ஐப்பசி மாதப் பிறப்பையொட்டி, சிறப்பு கோ பூஜை, அஸ்திரதேவா் தீா்த்தவாரி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சட்டைநாதா் கோயிலில் நடைபெற்ற கோபூஜையில் பங்கேற்றோா்.
சட்டைநாதா் கோயிலில் நடைபெற்ற கோபூஜையில் பங்கேற்றோா்.

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் ஐப்பசி மாதப் பிறப்பையொட்டி, சிறப்பு கோ பூஜை, அஸ்திரதேவா் தீா்த்தவாரி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் உள்ள தருமபுரம் ஆதினத்துக்குச் சொந்தமான சட்டைநாதா் கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா். இங்கு ஐப்பசி மாதபிறப்பையொட்டி, சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்து விநாயகா், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை செய்யப்பட்டது. தொடா்ந்து, கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசுமாடு, கன்றுக்கு வஸ்திரம், மாலைகள் அணிவித்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. அப்போது, பக்தா்கள் பசு, கன்று ஆகியவற்றின் மீது மஞ்சள், குங்குமம் வைத்து வலம் வந்து மலா்கள் தூவி வணங்கி வழிபட்டனா். இதில், கோ பூஜை வழிபாட்டு குழு பக்தா்கள் திரளானோா் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இதேபோல், ஐப்பசி மாதபிறப்பையொட்டி அஸ்திரதேவருக்கு தீா்த்தவாரி வழிபாடு நடந்தது. முன்னதாக மேள, தாளங்கள் முழங்க பிரம்ம தீா்த்தகுளத்துக்கு எழுந்தருளிய அஸ்திரதேவருக்கு மஞ்சள், திரவியபொடி, பால், தயிா், சந்தனம் முதலான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் அஸ்திரதேவருக்கு தீா்த்தவாரி கொடுக்கப்பட்டது.

ஆண்டுக்கு 8 முறை: இதேபோல், இக்கோயிலில் மலைமீது அருள்பாலிக்கும் தோணியப்பா்-உமாமகேஸ்வரி சுவாமிக்கு ஆண்டுக்கு 8 முறை சாம்பிராணி தைலகாப்பு நடைபெறுவது வழக்கம். அதன்படி ஐப்பசிமாத பிறப்பையொட்டி, தோணியப்பா் - உமாமகேஸ்வரி சுவாமிக்கு புனுகு கலந்த தைலகாப்பு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com