நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே புஞ்சை கீரப்பாளையம் கிராமத்தில் குளம் தூர்வாரும் பணியின்போது, 5 அடி உயரமுள்ள பெருமாள் கற்சிலை வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
புஞ்சை கீரப்பாளையம் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலை அடுத்த ஆலங்குளம் குடிமராமத்துப் பணியின்கீழ் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை குளத்தை தூர்வாரி மணல் எடுத்தபோது 5 அடி உயரமுள்ள பெருமாள் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருண் ஆகியோர் பெருமாள் சிலையைப் பார்வையிட்டு தரங்கம்பாடி வட்டாட்சியர் சித்ராவுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, வருவாய்த் துறையினர் அந்த சிலையைக் கைப்பற்றி வட்டாட்சியர் அலுவலகம் எடுத்துச் சென்றனர். மேலும், இந்த குளத்தை ஆய்வுக்குள்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.