நாகை அருகே இருவேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நாகை மாவட்டம், ஒக்கூர் அருகேயுள்ள மூலப்படுகை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (24). இவர், செவ்வாய்க்கிழமை நாகூர்- கங்களாஞ்சேரி சாலை, வெட்டாற்றுக்கு குளிக்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, ராஜேஷ்சுவின் தந்தை ராஜேந்திரன் நாகை தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலின்பேரில், தீயணைப்பு வீரர்கள் புதன்கிழமை வெட்டாற்று பகுதிக்கு சென்று தேடி, ராஜேஷை சடலமாக மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை சிறுவன் உயிரிழப்பு : இதேபோல், சென்னை திருவல்லிக்கேணி கபாலி நகரைச் சேர்ந்த வாஹித் ஹூசைனின் மகன் அப்துல் சுக்கூர் (11). உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த வாஹித் ஹூசைன், நாகை அருகேயுள்ள பாப்பாகோவில் தர்ஹாவில் தங்கி சில நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், அப்துல் சுக்கூர் தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தர்ஹா குளத்துக்கு தண்ணீர் எடுக்கச்சென்ற அப்துல் சுக்கூர் குளத்தில் தவறி விழுந்தார். இதையடுத்து, அருகிலிருந்தவர்கள், சிறுவனை மீட்டு, நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும், அங்கு அப்துல் சுக்கூர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, நாகை நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.