பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது போராட்டத்தை புதன்கிழமை வாபஸ் பெற்றனர்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், மீன்வள அறிவியல் படிப்புக்கு சுயநிதி கல்லூரி தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இதற்கான போராட்டத்தில் ஈடுபட்ட 11 மாணவர்களின் இடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், தகுதியானவர்களை மீன்வள ஆய்வாளர்களாக நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்டம், தலைஞாயிறு டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள்,
நாகை கடற்கரை சாலையில், தற்காலிக கட்டடத்தில் செயல்படும் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செப்டம்பர் 9-ஆம் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து, கல்லூரிக்கு கால வரையற்ற விடுப்பு அறிவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் விடுதியும் மூடப்பட்டது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் ஒன்றிணைந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் சுந்தரமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் புதன்கிழமை (செப்டம்பர் 11) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு காணப்படும் எனக் கூறியதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு:
இந்நிலையில், மாணவர்களின் போராட்டம் குறித்து தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலிலதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர் சு. பெலிக்ஸ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மாணவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
பேச்சுவார்த்தையில், பல்கலைக்கழகப் பதிவாளர் சீனிவாசன், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ராஜ்குமார்( பொ), தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் வேலாயுதம், தலைஞாயிறு டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் சுந்தரமூர்த்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.