நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள செருதூர் எல்லையம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
செருதூர் கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டு வந்த பழைமை வாய்ந்த எல்லையம்மன் மற்றும் காளியம்மன், செருதுணை விநாயகர், வலம்புரி விநாயகர், சப்தகன்னியம்மன் மற்றும் மன்மதேஸ்வரர் ஆகிய 6 கோயில்கள் கிராம மக்களின் பெரும் முயற்சியால் திருப்பணிகள் செய்யப்பட்டு, குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. செப்டம்பர் 10-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வரா பூஜைகளுடன் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கியன. தொடர்ந்து சிறப்பு வழிபாடுகளும், யாக பூஜைகளும் நடைபெற்று வந்தன.
குடமுழுக்கு நாளான வியாழக்கிழமை காலை 4-ஆம் கால யாகசாலை பூஜை, சிறப்பு வழிபாடுகள்,10.30 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடைபெற்றன. தொடர்ந்து, கடங்களில் கொண்டு செல்லப்பட்ட புனித நீர் கோயில் விமானத்தில் ஊற்றப்பட்டு காலை11.50 மணிக்கு எல்லையம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. முன்னதாக, செருதுணை விநாயகர், வலம்புரி விநாயகர், சப்த கன்னியம்மன், மன்மதேஸ்வரர், காளியம்மன் கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றன. மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை முதல்வர் ஏ.வி. சுவாமிநாத சிவாசாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். மாலை நேர நிகழ்வாக மகாபிஷேகம் மற்றும் அம்பாள் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.