வேதாரண்யத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டவரின் குடும்பச் சூழலை அறிந்த வேதாரண்யம் டிஎஸ்பி சபியுல்லா, இறந்தவரின் இறுதிச் சடங்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து உதவி செய்தார்.
அகஸ்தியம்பள்ளியை சேர்ந்தவர் செந்தில். இவருக்கும் இவரது சித்தப்பா மகன் ரவிக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் செந்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பொருளாதார நிலையில் பின்தங்கி ஆதரவின்றி இருந்த குடும்பத்தில் செந்திலின் இரு மகன்கள், ஒரு மகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொலையுண்டவரின் சடலம் புதன்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அப்போது, அங்கு சென்றிருந்த டிஎஸ்பி சபியுல்லா உயிரிழந்தவரின் குடும்பச் சூழலை அறிந்து ரூ. 10 ஆயிரம் இறுதிச் சடங்கு செலவுக்கு கொடுத்து உதவினார்.
மேலும், கோடிக்காடு கிராமத்தில் சம்பவம் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை இரவு தகராறில் காயமடைந்த 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல ஏற்ற வாகனங்கள் கிடைப்பது தாமதமானது. அந்த நிலையில், காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்க டிஎஸ்பி உதவியதும் குறிப்பிடத்தக்கது.