கொள்ளிடம் அளக்குடியில் நிரந்தர தடுப்புச் சுவர் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆசைத்தம்பி வியாழக்கிழமை தெரிவித்தார்.
நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை 2018-ஆம் ஆண்டு காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு கட்டப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்புச் சுவர் உடைந்து சேதமடைந்தது. இதனால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளஅபாயத்தில் இருந்தன.
அப்போது, ரூ. 1கோடி செலவில் தற்காலிகமாக பனை மரங்கள்ஆப்பு, கருங்கற்கள் கொட்டப்பட்டு தடுப்புச் சுவர் கரை பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் 29 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு சென்றுகொண்டிருக்கிறது. இதனால் கடந்த ஆண்டு உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அளக்குடி மக்கள் கவலையுடன் உள்ளனர்.
இதற்கிடையில், அளக்குடி கொள்ளிடம் ஆற்றின் கரையை வியாழக்கிழமை பார்வையிட்ட காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆசைத்தம்பி செய்தியாளர்களிடம் கூறியது: அளக்குடி பகுதியில் மழை காலம் தொடங்கும் முன்பாக தற்காலிக சீரமைப்பு பணியும், அதன்பின்னர் ஐ.ஐ.டி பேராசிரியர்கள் குழுவின் மூலம் ஆய்வு செய்து நிரந்த தடுப்புச் சுவர் அமைக்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்றார் அவர். ஆய்வின்போது, பொதுப்பணித் துறை
அலுவலர்கள் உடனிருந்தனர்.