சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் காவல் துறை சார்பில் சாலைகளில் கயிறுகளை கொண்டு எல்லைக் கோடு அமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
சீர்காழி நகர் பகுதியில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், தென்பாதி, கச்சேரி சாலை, மணிக்கூண்டு, கொள்ளிடம் முக்கூட்டு, கடைவீதி, பிடாரி வடக்கு வீதி, சிதம்பரம் சாலை, ரயில்வே சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் சரக்கு லாரிகள், ஆட்டோக்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்படுவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இதன்காரணமாக பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்லும் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவதுடன், 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயனைப்பு நிலைய வாகன ஊழியர்களும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
எனவே, மேற்கண்ட நெரிசலான பகுதிகளில் போக்குவரத்தை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், டிஎஸ்பி வந்தனா தலைமையில் சீர்காழி ஆய்வாளர் (பொ) சதீஷ்குமார், சார்பு ஆய்வாளர் ராஜா மற்றும் போலீஸார் போக்குரத்து பாதிப்பை தவிர்க்கும் வகையில் பழைய பேருந்து நிலையம் அருகில் சாலையின் இருபுறங்களிலும் எல்லைக் கோடுகளில் கயிறுகளை பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையறிந்த, பொதுமக்கள் காவல் துறையினரை பாராட்டினர்.
இதுகுறித்து காவல் துறையைச் சேர்ந்தவர்கள் கூறியது: சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூராக வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளில் எல்லைக் கோட்டை தாண்டி வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் சாலை விதிகளை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்றனர்.