வாசிப்பு பழக்கம் இருந்தால் போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம் என நாகை மாவட்ட நூலக அலுவலர் கோ. ராஜேந்திரன் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்கள் 40 பேர்நூலக உறுப்பினர்களாக இணையும் நிகழ்ச்சி, நாகை மாவட்ட மைய நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் கோ. ராஜேந்திரன் பேசியது : வாசிப்பு பழக்கத்தை வாழ்வியல் நடைமுறையாக்கும் நோக்கில் தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொதுநூலகத் துறை இணைந்து வாசிப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது. நாகை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் நூலக உறுப்பினர்களாக இணைந்து வருவது பாராட்டுக்குரியது.
நூலகத்தில் சேர்ந்து படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
தொடர் வாசிப்பு பழக்கம் உடையவர்கள் பொது அறிவில் சிறந்து விளங்குவார்கள். போட்டித் தேர்வுகளிலும் எளிதில் வெற்றி பெறலாம். வாழ்வின் முன்னேற்றத்துக்கு ஏணியாக விளங்கும் நூலகத்தை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து,நூலக உறுப்பினர்களாக இணைந்த நாகை சின்மயா மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். மாவட்ட மைய நூலகத்தின் நூலகர் மீனாகுமாரி, நூலகர்கள் தமிழ்ச்செல்வன், நாகராஜ், நிர்மலா, சின்மயா மேல்நிலைப் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.