மயிலாடுதுறை ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் மக்கள் குறைகேட்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ரூரல், கோடங்குடி, செருதியூர், குளிச்சாறு, மன்னம்பந்தல், மணக்குடி, வள்ளாலகரம், உளுத்துக்குப்பை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற முகாம்களில் மயிலாடுதுறை எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் பங்கேற்று, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அவரிடம் பொதுமக்கள் குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரியும், முதியோர் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கோரியும் மனு அளித்தனர். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.ஜி. இளங்கோவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மைவிழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குத்தாலம் ஒன்றியத்தில்...
குத்தாலம் ஒன்றியம் ஆனந்தநல்லூர், கப்பூர், மங்கநல்லூர், கழனிவாசல், பொரும்பூர், எழுமகளூர், நக்கம்பாடி, பாலையூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மக்கள் குறைதீர் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் பங்கேற்று, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டனர். இதில் நடிப்பிசை புலவர் கே.ஆர். ராமசாமி சர்க்கரை ஆலை தலைவர் என். தமிழரசன், மங்கநல்லூர் சரக வருவாய் ஆய்வாளர் திரிபுரசுந்தரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செம்பனார்கோவில் ஒன்றியத்தில்...
செம்பனார்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் மக்கள் குறைகேட்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மருதம்பள்ளம், காலமநல்லூர், கிடங்கல், மாமாகுடி, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற முகாம்களில் பூம்புகார் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருண், அதிமுக ஒன்றியச் செயலாளர் சுந்தரராஜன், ஊராட்சி மன்ற செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.