நாகை மாவட்டம், கீழ்வேளூர், புனித சூசையப்பர் ஆலய மாதா சிலையை சேதப்படுத்தியதாக ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கீழ்வேளூரில் நாகை- திருவாரூர் சாலையில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தின் மாதா சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தது சனிக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து ஆலயத்தின் பங்கு தந்தை ரா. ஜான்பீட்டர் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். விசாரணையில், கீழ்வேளூர் வட்டம், ஆனைமங்களம், பிரதான சாலையைச் சேர்ந்த தர்மராஜ் மகன் ஸ்டாலின் (35) சிலையை சேதப்படுத்தியதும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.