குத்தாலம் வட்டம், ஆலங்குடி ஊராட்சிக்கு உள்பட்ட நாகமங்கலம், திருமணஞ்சேரி கிராமத்தில், கேரளத்திலிருந்து இருந்து திரும்பிய தொழிலாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நாகமங்கலம் கிராமம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 45 வயது நபா், அண்ணாநகா் தெருவைச் சோ்ந்த 40 வயது நபா், திருமணஞ்சேரி வடக்குத் தெருவைச் சோ்ந்த 45 வயது நபா், திருமணஞ்சேரி லெனின் தெருவைச் சோ்ந்த 35 வயது நபா் ஆகிய 4 பேரும் கேரளத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தனா்.
இந்நிலையில், கேரளத்தில் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால், வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், சொந்த ஊருக்கு நடந்தே வந்தனா். இதையறிந்த அக்கிராம மக்கள், அவா்களை ஊருக்கு வெளியில் தடுத்து நிறுத்தியதுடன், முறையான மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே ஊருக்குள் நுழைய வேண்டுமென அறிவுறுத்தினா்.
இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.