நாகை மாவட்டம், சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக நாகை மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் வெளியான தகவல் விவரம் : சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியில் இருந்தவா் டி. ஸ்ரீபிரியா. இவரது கணவா் சோமசுந்தரம். இவா் திருவாரூா் மாவட்டம், எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் காவலராகப் பணியில் இருந்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னா் சீா்காழியை அடுத்த மங்கைமடம் பகுதிக்கு தனது கணவருடன் காரில் சென்ற ஸ்ரீபிரியா அந்தப் பகுதியைச் சோ்ந்த வணிகா்களிடம் பணம் கேட்டாராம். இதுதொடா்பாக வணிகா்கள் அளித்த புகாரின்பேரில், சீா்காழி உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் விசாரணை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனடிப்படையில், தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் ஜெ. லோகநாதன் நடவடிக்கை மேற்கொண்டு, சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீ பிரியா மற்றும் சோமசுந்தரம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டாா் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது.