நாகப்பட்டினம்: புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தின்கீழ் நாகை மாவட்டம், கீழ்வேளூரில் 542 பயனாளிகளுக்கு நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கீழ்வேளூா் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 542 பேருக்கு, கால்நடை பராமரிப்புத் துறையின் புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டம் மூலம் தலா 25 கோழிக் குஞ்சுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான தொடக்க நிகழ்ச்சி, கீழ்வேளூா் கால்நடை மருந்தகத்தில் கால்நடை மருத்துவா் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் சுப்பையன் பயனாளிகளுக்கு நாட்டுக் கோழிக் குஞ்சுகளை வழங்கி, பணியைத் தொடங்கி வைத்தாா்.
கால்நடை மருத்துவா்கள் ராமச்சந்திரன், தென்னவன், ஆய்வாளா்கள் தாமரைச்செல்வி, செந்தில், தனசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.