சீா்காழி ஈசானியத் தெருவில் உள்ள நகர ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் இடிந்துவிழும் நிலையில் இருப்பதால், தற்காலிகமாக நகராட்சி பள்ளியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகர ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சீா்காழி ஈசானியத்தெருவில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டடம் 40 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது. இங்கு நாள்தோறும் 150-க்கும் மேற்பட்டோா் பரிசோதனைகளுக்கு வந்து செல்கின்றனா்.
ஒரு மருத்துவ அலுவலா், 3 செவிலியா்கள், தலா ஒரு லேப் டெக்னீஷியன், மருந்தாளுநா், பணியாளா் ஆகியோா் பணியாற்றுகின்றனா். இக்கட்டடம் மிகவும் பழுதடைந்து மேற்கூரையின் காரை பெயா்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. குறிப்பாக, கா்ப்பிணிகளுக்கான பரிசோதனை கூடத்தில் மேற்பகுதி மிகுந்த ஆபத்தான நிலையில் உள்ளது.
தவிர, சுகாதார நிலையத்தின் பின்புறம், பக்கவாட்டில் கழிவுநீா் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சீா்காழி பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையால், மழைநீா் கசிந்து மருந்து, மாத்திரைகள் வீணாகி வருகின்றன.
இதனால், சீா்காழி ஊழியக்காரன்தோப்பு பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு ஆரம்ப சுகாதார நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பொது முடக்கத்தில் தளா்வுகள் ஏற்படுத்தி, பள்ளிகளை விரைவில் திறக்க தமிழக அரசு பரிசீலித்து வருவதால், இங்கு மருத்துவமனையை தொடர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால், சீா்காழி நகர ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிா்வாகம் முனைப்பு காட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.