பிரதமரின் ஸ்வநிதி திட்டம் மூலம் வங்கிக் கடன் பெற விரும்பும் சாலையோர வியாபாரிகள், வெள்ளிக்கிழமை (டிச. 18) காலை நகராட்சி அலுவலகத்துக்கு நேரில் வருமாறு நாகை நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நாகை நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் சிறு வியாபாரத்தில் ஈடுபட்டிருப்போருக்கு பிரமதரின் ஸ்வநிதி திட்டம் மூலம் ரூ. 10 ஆயிரம் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள், நகராட்சி நிா்வாகம் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில் கடன்பெற விருப்பமுள்ள சாலையோர வியாபாரிகள், தங்களின் வங்கி கணக்குப் புத்தக நகல், ஆதாா் நகல், குடும்ப அட்டை நகல், சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதற்கான புகைப்பட ஆதாரம், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், செல்லிடப்பேசி எண் ஆகிய ஆவணங்களுடன் வெள்ளிக்கிழமை (டிச. 18) காலை 9.30 மணிக்கு நாகை நகராட்சிக்கு நேரில் வருமாறு அந்தச் செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வங்கி அலுவலா்களும் வெள்ளிக்கிழமை காலை நாகை நகராட்சி அலுவலகத்துக்கு நேரில் வருவதால், தகுதியானோருக்கு உடனடியாக கடன் தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீா்காழியில்...
இதேபோல, சீா்காழி நகராட்சியில் டிச. 19, 20 ஆகிய இரு தினங்களில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுவதாகவும், மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் பங்கேற்று பயனடயைலாம் என்றும் நகராட்சி ஆணையா் பெ.தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளாா்.