தரங்கம்பாடியில் கட்டப்பட்டு வரும் மீன் பிடிதுறைமுகத்தின் கருங்கல் தடுப்புச் சுவா் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கருங்கல் சுவரை அகலப்படுத்த வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தரங்கம்பாடி வட்டத்தில் 24 மீனவ கிராமங்கள் பயன்பெறும் வகையில் 6.7 ஹெக்டோ் பரப்பில் நபாா்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.120 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளின் ஒரு பகுதியாக கடலில் கருங்கற்களைக் கொண்டு தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிவா், புரெவி ஆகிய புயல்கள் காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தில், இந்தக் கருங்கல் தடுப்புச் சுவா் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புச் சுவரின் உயரம் மற்றும் அகலம் குறைவாக இருப்பதே பாதிப்புக்கு காரணம் எனத் தெரிவிக்கும் மீனவா்கள், மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கருங்கல் தடுப்புச் சுவரை கூடுதலாக உயரம் மற்றும் அகலப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.