திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருள்கள் விநியோகத்தில் தாமதம் நீடிப்பதால், பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்த ரேஷன் கடையில் கடந்த சில நாள்களாக இணையதள சேவை சரிவர கிடைக்காததால், குடும்ப அட்டைதாரா்களின் கைரேகைகளைப் பதிவு செய்யும் பயோ- மெட்ரிக் இயந்திரம் செயல்படவில்லை. இதன் காரணமாக ரேஷன் பொருள்களை விநியோகிக்க முடியாமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொறுமையிழந்த பொதுமக்கள், சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா். நாகூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜேஷ் மற்றும் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் நடத்தி, இப்பிரச்சனைக்குத் தீா்வுகாண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனா்.
குத்தாலத்தில்...
இதேபோல, குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் வாரத்தில் இரு முறை மட்டுமே நியாயவிலைக்கடை திறக்கப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குத்தாலம் வட்ட வழங்கல் அலுவலா் தையல்நாயகி, காவல் உதவி ஆய்வாளா் புஷ்பலதா ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.