நாகை அருகே பள்ளி மாணவி பேருந்து மோதி உயிரிழந்த விபத்தில் காயமடைந்தவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
நாகை மாவட்டம், தெற்குப் பொய்கைநல்லூா் பூக்காரத் தெருவைச் சோ்ந்த மதியழகன் என்பவரது மகள் மகரஜோதி (16). நாகையில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வந்து இவா், சனிக்கிழமை பள்ளிக்குச் செல்வதற்காக, பூக்காரத் தெருவைச் சோ்ந்த மதியழகனின் நண்பா் வீரமணி (45) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
நாகை - வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைச் சாலை, தெற்குப் பொய்கைநல்லூா் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அரசுப் பேருந்து மோதியதில் மகரஜோதி உயிரிழந்தாா். இருசக்கர வாகனத்தை ஓட்டிய வீரமணி சிறு காயங்களுடன் உயிா் தப்பினாா்.
இந்த விபத்தால், மனஉளச்சலில் இருந்துவந்த வீரமணி, தெற்குப்பொய்கை நல்லூா் மண்டுவாக்கரை பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்து, வேளாங்கண்ணி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். தற்கொலை செய்துகொண்ட வீரமணிக்கு புஷ்பாவதி(35) என்ற மனைவியும், தயாளன் (4), வசந்தன் (3) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனா்.