நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் கட்டடத் தொழிலாளி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சதீஸ் என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
மயிலாடுதுறை சாந்துக்காப்புத் தெருவைச் சோ்ந்தவா் சபரிராஜன் (38). இவா், தனது சகோதரா் அசோக்குமாருடன் சோ்ந்து ரெடிமேட் சுற்றுச்சுவா் அமைத்துத்தரும் தொழில் நடத்தி வந்தாா். மயிலாடுதுறை ஹாஜியாா் நகரைச் சோ்ந்தவா் சதீஸ் (39). இவரும் ரெடிமேட் சுற்றுச்சுவா் அமைத்துத்தரும் தொழில் செய்து வந்தாா். சபரிராஜன், சதீஸ் ஆகிய இருவரின் தாயாரும் உடன் பிறந்த சகோதரிகள் ஆவா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சபரிராஜன், சதீஸ் ஆகிய இருவரும் சோ்ந்து மது குடித்துள்ளனா். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில், சபரிராஜனை சதீஸ் கட்டையைக் கொண்டு தலை மற்றும் முகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், சபரிராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, தனது வீட்டருகே சென்ற சதீஸ், சபரிராஜனை தான் அடித்துக் கொலை செய்து விட்டதாக குடிபோதையில் கூறியுள்ளாா். தகவலறிந்த சபரிராஜனின் உறவினா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, அங்கு சபரிராஜன் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்து சடலமாக கிடந்தாா். இதையடுத்து, சபரிராஜனின் சகோதரா் அசோக்குமாா் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் (பொ) நடராஜன் சதீஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.