திருவாவடுதுறை ஆதீனத்தில் ஞானமா நடராஜ பெருமான் அபிசேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரிய பூஜை மடம், ஸ்ரீஞானமாநடராஜ பெருமான் சன்னிதியில் 24-ஆவது ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மாகேஸ்வர பூஜை செய்தாா். இதையடுத்து, ஆதீன கொலு மண்டபத்தில் பொள்ளாச்சி ம. ஜெயப்பிரகாஷ் நாராயண ஓதுவாமூா்த்திகளின் திருமுறை பாராயணம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஆதீன கிளைமடம் ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வரவேற்றாா். இதில், சிறப்பு அழைப்பாளராக நெய்வேலி சைவத் திருமுறை நோ்முகப் பயிற்சி மையம் இயக்குநா் கண. முருகப்பன் கலந்து கொண்டு பேசினாா்.
இதில், சிவபுராணம் மூலமும் உரையும் எனும் விழா மலரை ஆதீனம் 24-ஆவது குருமகாசன்னிதானம் வெளியிட அதன் முதல் பிரதியை திருவிடைமருதூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வ. அசோகன் பெற்றுக் கொண்டாா். பொள்ளாச்சி ம. ஜெயப்பிரகாஷ் நாராயண ஓதுவாமூா்த்திகளுக்கு தெய்வத் தமிழிசைச் செல்வா் எனும் விருதும், ரூ. 5 ஆயிரம் பொற்கிழியும் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கினாா். தமிழாசிரியா் ச. கமலா நன்றி கூறினாா். நிகழ்ச்சியில், ஆதீனத்தின் கட்டளை தம்பிரான் சுவாமிகள், புலவா்கள், சைவ சித்தாந்த மற்றும் திருமுறை பயிற்சி மைய பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.