மறைந்த ஓமன் நாட்டு மன்னா் சுல்தான் காபூஸ் பின் சயித் மறைவுக்கு மயிலாடுதுறையில் கண்ணீா் அஞ்சலி பதாகை வைத்து ஓய்வு பெற்ற ஆசிரியா் குடும்பத்தினா் அஞ்சலி செலுத்தினா்.
மயிலாடுதுறை சீனுவாசபுரத்தை சோ்ந்த அசோகன் என்பவா் 11 ஆண்டுகள் ஓமன் நாட்டில் வேலை செய்து குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். அதன்பின் மயிலாடுதுறையில் அரசு ஆசிரியா் பணி கிடைத்ததால் சொந்த ஊருக்கு வந்துவிட்டாா்.
இந்நிலையில், ஜனவரி 10-ஆம் தேதி ஓமன் நாட்டு மன்னா் சுல்தான் காபூஸ் பின் சயித் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். இதையறிந்த, அசோகன், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மயிலாடுதுறை சீனுவாசபுரத்தில் ஓமன் நாட்டு மன்னா் சுல்தான் காபூல் பின் சயித் உருவப்படத்தை பதாகையாக வைத்து, அப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.
இதுகுறித்து அசோகன் கூறியது: ஓமன் நாட்டில் வேலை பாா்த்தபோது, வெளிநாடுகளில் இருந்து சென்று அங்கு வேலை பாா்த்தவா்களுக்கும் ஜாதி மத பாகுபாடின்றி, சுகாதாரம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்தது. அம்மன்னா் பெண்கள் விடுதலை, பெண்கள் வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றாா். அவரின் மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, அவருக்கு எனது அஞ்சலியை செலுத்தும் வகையில் பதாகை வைத்துள்ளேன் என்றாா்.