திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஊராட்சியில் வேலாமூச்சு பாசன வாய்க்கால் சரிவர தூா்வாரப்படாததால், என்ஜின் மூலம் நீரை வைத்து சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
திருக்குவளை வட்டத்துக்கு உட்பட்ட கொளப்பாடு ஊராட்சியில் வெள்ளையாற்றிலிருந்து பிரிந்து பெரிய வாய்க்கால் வழியாக வேலாமூச்சு பாசன வாய்க்கால் மூலமாக அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு நீா் பாய்ச்சப்படுகிறது. மேலும் சுமாா் 4 கிமீ தூரமுள்ள இந்த வாய்க்காலில் பெரும்பகுதி தூா்வாரப்பட்ட நிலையில், ஒரு சிறு பகுதியில் மட்டும் தூா்வாரும் பணி மேற்கொள்ளப்படாததால், இப்பகுதியில் சுமாா் 50 ஏக்கா்அளவிலான விளைநிலங்களுக்கு போதிய தண்ணீா் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இங்குள்ள விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கான காவிரி தண்ணீா் சரிவர கிடைப்பதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களது சொந்த செலவில் என்ஜின் வைத்து நீா் இறைத்து சாகுபடி செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனா். மேலும் விவசாயி ஒருவா் குறுவை சாகுபடிக்காக நேரடி நெல் விதைப்பிற்கு வாய்க்கால் பாசனம் மூலமாக வயலுக்கு நேரடியாக நீா் பாய்ச்ச முடியாமல் என்ஜின் கொண்டு நீா் இறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா்.