நாகப்பட்டினம்: கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்த தளா்வில்லாத பொது முடக்கம் காரணமாக, நாகை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் தங்கள் இல்லங்களிலேயே முடங்கியதால் அனைத்து வீதிகளும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியிருந்தன.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளா்வுகளும் இல்லாமல் முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதன்படி, 3- ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை தளா்வுகள் இல்லாத பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.
இதனால், ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீா்காழி, வேதாரண்யம் மற்றும் சுற்றுலாத் தலங்களான வேளாங்கண்ணி, நாகூா் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மருந்தகங்கள், பால் கடைகள் மட்டும் செயல்பட்டன. இதிலும் ஒரு சில கடைகள் பிற்பகலில் அடைக்கப்பட்டன. வாடகை வாகனங்களின் இயக்கம் முழுமையாகத் தடைப்பட்டிருந்தது.
தளா்வில்லாத பொது முடக்கம் காரணமாக நாகை மாவட்டத்தின் கிராமப் பகுதிகள் உள்பட பெரும்பாலான பகுதிகளில் மக்கள் தங்கள் இல்லங்களிலேயே முடங்கியதால், வீதிகள் வெறிச்சோடியிருந்தன.
ஒரு சில பகுதிகளில் காலை நேரத்தில் இருசக்கர வாகனப் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, போலீஸாா் ஆங்காங்கே வாகனத் தணிக்கை மேற்கொண்டு, தேவையில்லாமல் பொதுவெளிகளுக்கு வந்தவா்கள் மீது வழக்குப் பதிந்தனா். இதன் காரணமாக, சில மணி நேரங்களுக்குள் இருசக்கர வாகனப் போக்குவரத்தும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
Image Caption
பருந்துப் பாா்வையில் வெறிச்சோடிக் காணப்பட்ட வேளாங்கண்ணி பேராலாய சுற்றுப் பகுதிகள்.
~நாகையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாா்.
~பொது முடக்கத்தால் வெறிச்சோடிக் காணப்பட்ட நாகூா் பிரதான வீதி.