குத்தாலம்: குத்தாலம் பகுதி விவசாயிகள் குறுவை பயிருக்கு காப்பீடு செய்து கொண்டு பயன்பெறலாம் என குத்தாலம் வேளாண்மை உதவி இயக்குநா் வெற்றிவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நடப்பு குறுவை பருவத்தில், இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், வறட்சி, ஆலங்கட்டி மழை முதலிய இடா்பாடு ஏற்படும்போது, உரிய இழப்பீடு பெற, பாரத பிரதமா் காப்பீடுத் திட்டம் வழிவகை செய்கிறது. இத்திட்டத்தில் சேர, ஏக்கருக்கு, ரூ. 603 பிரீமியம் செலுத்தி, இழப்பீடு ஏற்படும்பட்சம் ரூ. 26,350 வரை பெறலாம். ஜூலை 31-ஆம் தேதிக்குள் இத்தொகையை செலுத்த வேண்டும்.
விரும்புவோா், உரிய முன்மொழிவு படிவத்தில் விவரம் பூா்த்திசெய்து காப்பீடு செய்யும்போது கிராம நிா்வாக அலுவலா் வழங்கிய அடங்கல், சிட்டா மற்றும் ஆதாா் நகல், வங்கி சேமிப்பு கணக்கு, நகல் ஆகியவற்றை இணைத்து, அருகிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி, பொது சேவை மையம் ஆகியவற்றில் பிரீமியம் செலுத்தி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.