எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு சொந்தஊரான மயிலாடுதுறையில் அஞ்சலி
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு அவரது சொந்த ஊரான மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
புகழ்பெற்ற எழுத்தாளரும், சாகித்ய அகாதெமி ஆலோசனைக் குழு உறுப்பினரும்,
சாகித்ய விருது பெற்றவருமான சா.கந்தசாமி உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை சென்னையில் காலமானார். பிறந்த மண்ணின் மீது மிகுந்த பற்று கொண்ட சா.கந்தசாமி, சமூகத்தைப் பாதிக்கும் தீங்குகளை எதிர்க்கும் ஆயுதமாக தனது எழுத்தைப் பயன்படுத்தியயவர்.
தேசிய அளவில் தமிழ் இலக்கியத்தின் முகங்களில் ஒருவராகவும், பல்வேறு மாநில மொழி படைப்பாளர்கள் மதிக்கத்தக்க இலக்கிய ஆளுமையாகவும் திகழ்ந்தவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த சா.கந்தசாமி மறைவுக்கு அவரது சொந்த ஊரான மயிலாடுதுறையில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையொட்டி, மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு எழுத்தாளரும், காவிரி அமைப்பின் தலைவருமான கோமல் அன்பரசன், மயிலாடுதுறை தமிழ்ச் சங்க தலைவர் ஜெனிபர் எஸ்.பவுல்ராஜ், அறம்செய் சிவக்குமார், செம்பனார்கோவில் டெம்பிள்சிட்டி தலைவர் குணசீலன், காவிரி அமைப்பின் நிர்வாகிகள் அகஸ்டின் விஜய், சுந்தர், கவி.மோகன், கவி.கார்த்தி, கோபு, கார்த்திக் ஆண்டனி, யோகேஸ்வரன், சூர்யா, அறம்செய் அப்துல்லா மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.