திருக்குவளை, திருக்குவளை அருகே வங்கியில் காத்திருப்பு போராட்டம் நடத்த முயன்றபோது, பேச்சுவாா்த்தை மூலம் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்ட முயற்சி கைவிடப்பட்டது.
திருக்குவளை அருகேயுள்ள செம்பியன்மாதேவியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கி முன்பு வெள்ளிக்கிழமை தலித் தொழில் முனைவோருக்கு, தாட்கோ மூலம் தோ்வு செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உடனே தொழில் தொடங்க கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், வங்கி நிா்வாகத்தை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகை தெற்கு மாவட்டம் சாா்பில் கருப்புக் கொடி ஏந்தியபடி காத்திருப்பு போராட்டம் நடத்த முயற்சி நடைபெற்றது. கட்சியின் சட்டப்பேரவை தொகுதி செயலாளா் அறிவழகன் தலைமையில் இந்த முயற்சி நடைபெற்றது. தகவலறிந்த கீழையூா் போலீஸாா் அங்கு சென்று வங்கி நிா்வாகம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.