மயிலாடுதுறையில் எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அந்த கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கை: எம்.கே.டி என்று தமிழ்த் திரையுலகில் அழைக்கப்பட்ட மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதா் கடந்த 7.3.1910-இல் மயிலாடுதுறையில் பிறந்தவா். 1959-இல் சென்னையில் காலமானாா். மயிலாடுதுறையில் பிறந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் மணிமண்டபத்தை அவா் பிறந்த ஊரான மயிலாடுதுறையில் அமைக்காமல் தற்போது தமிழக அரசு திருச்சியில் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளது.
தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிச்சாமி திருச்சியில், மாநகராட்சிக்குள்பட்ட அபிஷேகபுரத்தில் ரூ. 42 லட்சம் செலவில் எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளாா். பிறந்த ஊரில் மணிமண்டபம் அமைப்பது தான் சிறந்ததும், மரபும் ஆகும். அதனால், மயிலாடுதுறையில் பிறந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் மணிமண்டபத்தை திருச்சியில் அமைப்பதை விட்டுவிட்டு மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.