தமிழகத்தில் கரோனா தொற்றை தடுக்க நடைமுறையில் உள்ள பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நல வாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் 2 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கி நடைபெறும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரோனா தடுப்புக்கான பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட நல வாரியத்தி உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்ட நெசவுத் தொழில் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் 2 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நல வாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கும் மாதம் ரூ.ஆயிரம் வீதம் 2 மாதங்களுக்கு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் இலவச மின்சாரம் பெற்று தொழில் செய்யும் பதிவு செய்யாத நெசவாளர் 73, 184 பேர் இந்த உதவித் தொகையை பெறுவார்கள்.
அரசின் இந்த உதவித் தொகை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.