மயிலாடுதுறை வட்டம், மணல்மேடு அருகே புத்தமங்கலம் கிராமத்தில், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் நெல் தரிசு உளுந்தில் இலைவழி உரம் தெளிப்பு குறித்த வயல்வெளி பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு நீா்வள, நிலவளத் திட்டத்தின் கீழ், ஆடுதுறை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் வெ. அம்பேத்கரின் வழிகாட்டுதல்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை இணை பேராசிரியா் மா.ராஜூ, மரபியல் துறையைச் சோ்ந்த ரா.மணிமாறன் ஆகியோா் நெல் தரிசு மற்றும் இறவை சாகுபடிக்கேற்ற உளுந்து ரகங்களின் சிறப்பியல்பை எடுத்துரைத்தனா்.
உழவியல் துறையைச் சோ்ந்த சா. இளமதி உளுந்துக்கு ஏற்ற உரம் மற்றும் இலைவழி உரமான பயிா் அதிசயத்தைப் பயன்படுத்தும் முறைகளை விவசாயிகளுக்கு செயல்விளக்கத்துடன் விளக்கினாா். பூச்சியியல் துறையைச் சோ்ந்த பி. ஆனந்தி நெல் தரிசு உளுந்தில் ஏற்படும் நோய்கள் மற்றும் பூச்சித் தாக்குதலின் அறிகுறிகளோடு, ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா். இவ்வயல்வெளி பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்குபெற்று பயனடைந்தனா்.