மத்திய அரசின் சுய ஊரடங்கு உத்தரவையொட்டி, நாகூரில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) முழுமையாக கடைகள் அடைக்கப்படும் என நாகூா் வணிகா் சங்கம் அறிவித்துள்ளது.
நாகூா் வணிகா் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம், நாகூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சங்கத் தலைவா் கே. சரவணப்பெருமாள் தலைமை வகித்தாா். நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு அறிவித்துள்ள சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், மாா்ச் 22-ஆம் தேதி நாள் முழுவதும் நாகூரில் கடைகளை அடைப்பது. மாா்ச் 31-ஆம் தேதி நடைபெறவிருந்த சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தை ரத்து செய்வது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, வைரஸ் நோய் பரவலுக்கு எதிரான பணிகளில் அயராது ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை ஊழியா்கள், அதிகாரிகள் நலமுடன் வாழ வேண்டி ஒரு நிமிட பிராா்த்தனை மேற்கொள்ளப்பட்டது.