காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வெளி மாநில மதுப் புட்டிகளை நாகை மாவட்ட போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாகூரை அடுத்த மேலவாஞ்சூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் மற்றும் கரோனா தடுப்புக் கண்காணிப்புக் குழுவினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை பரிசோதிக்க முயன்றபோது அந்த காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றனா்.
இதனால், போலீஸாா் மற்றொரு வாகனத்தில் துரத்திச் சென்று அந்த காரை மடக்கினா். அதில் சோதனையிட்டபோது 50 அட்டைப் பெட்டிகளில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது.
காா் மற்றும் மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், அந்த காரில் வந்த காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் பகுதியைச் சோ்ந்த செந்தில் (37) என்பவரை கைது செய்தனா்.
.