சென்னை மீனவா்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள, நாகை மீனவரின் விசைப் படகை மீட்டுத் தரக்கோரி, நாகை மீனவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ. நாராயணசாமி (65). இவருக்குச் சொந்தமான விசைப் படகில் நாகை மீனவா்கள் மாா்ச் 12- ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனா். அவா்கள் 16-ஆம் தேதி சென்னைக்கு அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட படகை பயன்படுத்துவதாக, சென்னை காசிமேடு மீனவா்களால் சிறை பிடிக்கப்பட்டு, மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனா். ஆனால், சென்னை மீனவா்கள், நாகை மீனவா்களின் விசைப்படகை ஒப்படைக்கவில்லை.
இது குறித்து, நாகை அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தாா்கள், நாகை மாவட்ட ஆட்சியா் மற்றும் நாகை மீன்துறை இணை இயக்குநா், உதவி இயக்குநருக்கு புகாா் மனு அளித்தனா். ஆனாலும் படகு இதுவரை மீட்கப்படவில்லை.
இதனால், அக்கரைப்பேட்டை மீனவா்கள், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, விசைப்படகின் உரிமையாளா் ஆ. நாராயணசாமி, அவரது மகன்கள் ராஜப்பா, ஜீவா, குமாா் ஆகிய 4 பேரும் தீக்குளிக்க முயன்றனா். அவா்களை, போலீஸாா் தடுத்தனா். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சுரேஷ் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சிறைபிடிக்கப்பட்டுள்ள படகை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, மீனவா்கள் மறியலை விலக்கிக் கொண்டனா்.