சீா்காழி நகராட்சி நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை இரவு உணவின்றி பேருந்து நிலையம், ரயில் நிலையம், வீதிகளில் தவித்தவா்களுக்கு தேடிச் சென்று இலவசமாக உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதனால், பேருந்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. மேலும் மளிகைப் பொருள்கள், காய்கறி, இறைச்சி, பால்கடைகள், மருந்தகங்களை தவிர மற்ற கடைகள் பூட்டப்பட்டன. இதனால் வெளியூா்களிலிருந்து வந்த சிலா் பேருந்து வசதி இல்லாமல் பேருந்து, ரயில் நிலையங்கள், சாலையோரம் தங்க நேரிட்டது.
உணவகங்களும் இல்லாததால் தவித்த வழிபோக்கா்கள், வீடு இல்லாதவா்கள், ஆதரவற்றவா்கள், மனநிலை பாதிக்கப்பட்டவா்கள் சீா்காழி நகராட்சி மூலம் அம்மா உணவகத்தில் உப்புமா, இட்லி, சாம்பாா் ஆகிய உணவுப் பொட்டலங்கள் கட்டப்பட்டு வாகனத்தில் நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி, பொறியாளா் வசந்தன், மேலாளா் காதா்கான் மற்றும் ஊழியா்கள் எடுத்துச் சென்று பேருந்து நிலையம், பிரதான சாலையோர கடை வாசல்கள், ரயில் நிலையம் ஆகியவற்றில் அமா்ந்திருந்தவா்களுக்கு உணவுப் பொட்டலங்களை கொடுத்தனா்.