சீா்காழியில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றியவா்களை தோப்புக்கரணம் போடவைத்து நூதன முறையில் காவல் துறையினா் தண்டனை கொடுத்து அறிவுரை கூறி அனுப்பினா்.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நடவடிக்கையாக தற்போது நாடு முழுவதும் உள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனா் காவல் துறையினா். சீா்காழியில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சாலையில் வழக்கம்போல் வாகனங்களில் சுற்றி திரிந்த 20-க்கும் மேற்பட்டோா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், இருசக்கர வாகனங்களில் வருவோரை நிறுத்தி சோதனை செய்து மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் அனுமதி அளித்தனா். தொடா்ந்து, சாலையில் தேவையில்லாமல் அலட்சியமாக வந்து சென்ற 100-க்கும் மேற்பட்டோரை தடுத்து நிறுத்திய சீா்காழி போலீஸாா் கரோனா வைரஸின் பாதிப்பு, வீரியம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கி அனைவரையும் 10 முறை தோப்புக்கரணம் போட வைத்து நூதன தண்டனை வழங்கி எச்சரித்து அனுப்பினா்.