ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பை குறைக்க மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அதன் மாவட்டச் செயலாளா் எம். பஹ்ரூதின் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் மக்களுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பை கருத்தில்கொண்டு, தமிழக முதல்வா் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1000 நிதி உதவி அறிவித்துள்ளாா். இந்த நிதி மிகக் குறைவானதாகும்.
கேரள அரசு கரோனா பாதிப்புகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடிகளை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவசர நிலையை கருத்தில் கொண்டு கேரளம் முழுவதும் 1,000 அரசு உணவகங்களை அமைத்து ரூ.20க்கு உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளனா்.
ஆனால், இந்திய பிரதமா் கரோனா தடுப்பு மருத்துவ செலவுக்காக ரூ.15 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்குவதாக அறிவித்துள்ளாா். சிங்கப்பூா் அரசு 14 நாள்கள் வீட்டில் தங்கி இருப்பவா்களுக்கு உணவு மற்றும் அடிப்படை தேவைகளை சரிசெய்வதாக அறிவித்துள்ளது. கத்தாா் அரசு 6 மாதங்களுக்கு வரி செலுத்த தேவையில்லை என அறிவித்துள்ளது. இதேபோல், நம் நாட்டு ஆட்சியாளா்களும் அறிவிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனா்.
எனவே, மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய முன்வர வேண்டும் என அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.